கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், 'ஆன்லைன் கவுன்சிலிங்'

சென்னை : மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை போல, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், 'ஆன்லைன்' பதிவு மற்றும் 'ஆன்லைன் கவுன்சிலிங்' அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.முற்றுப்புள்ளிஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, ஒவ்வொரு கல்லுாரிக்கும் சென்று, நேரில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த கல்லுாரிகளின் முதல்வர்கள் முடிவு செய்து, சேர்க்கை வழங்குவர்.

இதில், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் இடம் கிடைக்கும். சில இடங்கள், சிபாரிசுகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும். சில கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையில், முறைகேடு பிரச்னைகள் எழுவதும் வழக்கம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக உயர் கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு மற்றும் கவுன்சிலிங்கை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.முன்னுரிமைஇதற்கான வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

ஆன்லைன் விண்ணப்ப பதிவு, http://tngasa.in என்ற இணையதளத்தில், நேற்று துவங்கியது. ஒவ்வொரு மாணவரும், தாங்கள் படிக்க விரும்பும் மாவட்டத்தையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்து, அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடப் பிரிவுகளையும் குறிப்பிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகளையும், மாணவர்கள் பதிவு செய்யலாம். மாணவர்கள் பதிவு செய்யும் கல்லுாரிகளில், அவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகளின் முன்னுரிமைப்படி ஒதுக்கப்படும்.ஒவ்வொரு கல்லுாரியும், பதிவு செய்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியலை வெளியிடும்; அதன் பின் ஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்கள் அந்த ஆணையை பெற்று, கல்லுாரிகளில் சேரலாம் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

பதிவு செய்வது எப்படி? வரும், 31ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்பவர்கள், தங்களின் சான்றிதழ்களின் அசல் பிரதிகளை, வரும், 25ம் தேதி முதல், ஆகஸ்ட், 5க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பத்தை, தங்கள் கணினி அல்லது மொபைல் போனில் இருந்து பதிவு செய்யலாம். அதற்கு வசதி இல்லாதவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள, சேவை மையங்களின் வழியாக பதிவு செய்யலாம்.