'ஆன்லைன்' வகுப்பு வழிமுறைகள்; அரசின் நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

சென்னை : மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி, தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்க, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மொபைல் போன், மடிக்கணியை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.'அப்போது, ஆபாச இணையதளங்களால், கவனம் சிதைவதற்கு வாய்ப்பு உள்ளது. முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த, தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.வழக்கறிஞர் விமல் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

'எனவே, ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அதன்படி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, 30 நிமிடங்கள்; ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 45 நிமிடங்கள் என, இரண்டு வகுப்புகள்; 9 முதல், 12 ம் வகுப்பு வரை, 45 நிமிடங்கள் என, நான்கு வகுப்புகள், ஆன்லைனில் நடத்தலாம் என, வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, மத்திய அரசு பிறப்பித்த வழிமுறைகளின்படி, தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 27க்கு தள்ளி வைத்தனர்.