தமிழகத்தில் பல தளர்வுகளுடன் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பலவித தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக., மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: நேற்று நடந்த ஆலோசனையில் மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த ஆலோசனை படியும், இன்று(ஜூலை 30) சுகாதார நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக 31.7.2020 வரை உள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஆக.,2,9,16,23,30) எவ்வித தளர்வுகளுமின்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.* பெருநகர சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்கண்ட பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
1. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

2. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் இயக்கப்படக்கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

3. அரசு ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஊராட்சி,பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்களில், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்களுடன் அனுமதியுடன் பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

4. காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை6 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கபபடுகிறது.

5. ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

6. அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.


* பெருநகர சென்னை காவல் துறைஎல்லைக்குட்பட்ட பகுதி தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதுிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1. அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஏற்கனவே ஊராட்சி பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும் சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன் பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.


பொது
* குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமானதளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள்/ பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணிபரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* ரயில் மற்றும் விமான போக்குவரத்து தற்போதுள்ள நிலையே தொடரும்

* ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் போதும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம்/ சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் முறைப்படி இபாஸ் வழங்க வேண்டும்

* தமிழகம் முழுவதும் ஆக.,15 அன்று, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தினம் கொண்டாடப்படும்


ஏற்கனவே நடைமுறையில்உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு தொடரும்

* மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிகபாட்டு தலங்களிலும் மற்றும்தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு

* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்

*நீலகிரி, மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றலா பயணிகள் செல்ல தடை தொடரும்

* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும் மருத்துவத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலரகள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைபடுத்துவதற்கு மட்டும்தை விலக்கு அளிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள்

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனஙகள், ஆராய்ச்சி நிறுவுனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்

*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்

*மெட்ரோ ரயில்/மின்சார ரயில்

* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், சுற்றுலா தலங்கள், உயிரிழல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு , பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய , கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்

* மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.