பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்

சென்னை: 'பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், வரும், 25ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தேர்வு துறை இயக்குனர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 மற்றும், பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன. தலைமை ஆசிரியர்கள், வரும், 24ம் தேதி முதல், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து வைக்கலாம். மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து, தலைமை ஆசிரியர்கள், பள்ளியின் முத்திரையிட்டு, கையெழுத்திட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு, முத்திரையிட்டு வழங்க வேண்டும். 25ம் தேதி முதல், 30ம் தேதி வரை, ஒவ்வொரு பள்ளியிலும், தலைமை ஆசிரியர்கள் வழியே, மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

விடைத்தாள் நகல்அனைத்து மாணவர்களும், தனித்தேர்வர்களும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டல் கோரி, விண்ணப்பிக்க விரும்பினால், 24ம் தேதி முதல், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள் அமைந்த பள்ளிகள் வழியே, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், உரிய அறிவுரை வழங்க வேண்டும். மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, மாணவர்களின் விண்ணப்ப படிவத்தை பதிவேற்ற வேண்டும்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, அதற்கான படிவம் அளித்து, எந்தெந்த பாடங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவை, எந்தெந்த பாடங்களுக்கு மறுகூட்டல் மட்டும் தேவை போன்ற விபரங்களை, மாணவர்கள் பூர்த்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு, 305 ரூபாய்; ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாய் கட்டணம்.

விடைத்தாள் நகல் கேட்பவர்கள், தற்போது மறுகூட்டலுக்கோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.ஒப்புகைச் சீட்டுமாணவர்கள் விண்ணப்பித்தவுடன், விண்ணப்ப எண், பதிவு எண், விண்ணப்பித்த பாடங்கள், கட்டணம் ஆகியவை அடங்கிய ஒப்புகை சீட்டு, மாணவர்களுக்கு தரப்பட வேண்டும். அவற்றை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.