கொரோனா மருந்து தயாரிப்பால் எகிறியது கிளென்மார்க் நிறுவன பங்கு மதிப்பு

மும்பை: இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிளென்மார்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது


இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் 'பேவிபிராவிர்' மருந்திற்கு அரசு ஒப்பதல் வழங்கியுள்ளது. இதையடுத்து இம்மருந்தினை மும்பையைச் சேர்ந்த நிறுவனமான கிளென்மார் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது வாய் வழியாக உட்கொள்ளப்படும் மருந்து. ஒரு மாத்திரையின் விலை ரூ 103/- . 200 மி.கி., என்ற அளவுடன் 34 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையின் விலை ரூ 3,500 /- ஆகிறது. ஆரம்ப நிலை மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இம்மாத்திரையின் 88 சதவீதம் வரை குணம் தெரியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இம்மருந்துக்கு மருத்துவத் துறையில் வரவேற்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் கிளென்மார்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் பங்கு மதிப்பு 40 சதவீதம் உயர்ந்து ரூ 573.05 ஆக விற்பனையானது. குஜராத் மாநிலத்தில் அங்கலேஷ்வர் தொழிற்சாலையில் இம்மாத்திரைக்கான மூலக்கூறுகளை உருவாக்கும் கிளென்மார்க் நிறுவனம் ஹரியானாவில் பெத்தி என்ற நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் மாத்திரைகளை தயாரிக்கிறது.


latest tamil news



முதல் மாதத்திலேயே 82,000 மாத்திரைகளை தயாரித்து நோயாளிகளுக்கு வழங்க முடியும். மருத்துவமனை மற்றும் மருந்துக்கடைகளில் இம்மாத்திரையின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இம் மருந்து பங்குச் சந்தையில் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை உடனடியாக கணித்து விட முடியாது. இதன் குணப்படுத்தும் தன்மை, நீடித்த ஆற்றல் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி ஒரு நோயாளிக்கு இம்மருந்தின் மூலமான அதிகபட்ச சிகிச்சை செலவு ரூ 12,556 என்று கணக்கிடப்பட்டுள்ளது.