காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குறைந்தாலும் தேர்ச்சி

சென்னை; 'பத்தாம் வகுப்பு தேர்வில், எத்தனை மதிப்பெண் எடுத்தாலும், அவர்கள் தேர்ச்சி செய்யப்படுவர்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.


பிளஸ் 1ல் ஒரு பாடத்துக்கான தேர்வும், ரத்து செய்யப்பட்டுள்ளதுரத்து செய்யப்பட்டு உள்ள பாடங்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பொதுத்தேர்வு மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களில் பலர், காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை விட குறைவாக எடுத்துள்ளதால், பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அரசு தேர்வு துறை இயக்குனர் பழனிசாமி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ரத்து செய்யப்பட்ட பாடங்களில், காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்ததில், 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்களும் இணைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரத்தான பாடங்களில், மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால், அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகவே கருதப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.