பிளஸ் 1, 'அட்மிஷன்' பள்ளிகளுக்கு தடை

சென்னை; 'தற்போதைய சூழலில், பிளஸ் 1 உட்பட எந்த வகுப்புக்கும், மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது' என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


நாடு முழுவதும், கொரோனா தொற்றால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் தரப்பில், மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பல தனியார் பள்ளிகள், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ள, மாணவர்களுக்கு, பள்ளிகள் பரிந்துரைத்துள்ளன.இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.கொரோனா பேரிடர் காலத்தில், அரசு அறிவிக்கும் அத்தியாவசிய பணிகளை தவிர, வேறு கற்பித்தல் பணிகள், மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. இந்த உத்தரவை மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.