பள்ளிகளில் கொரோனா முகாம் சி.இ.ஓ.,க்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னை:சென்னையில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில்,
தனிமைப்படுத்தப்படுவோரை தங்க வைக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை, அடிப்படை வசதிகளுடன், தயாராக வைத்திருக்கும் படி, சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர்களான, சி.இ.ஓ.,க்களுக்கு, சென்னை மாவட்ட கலெக்டர், சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

தனிமை வார்டுசென்னையில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களுடன் தொடர்புடையோரை கண்டறிந்து, தனிமைப்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. அவர்களை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி வைக்க, போதிய இடமில்லை. எனவே, பள்ளி கட்டடங்களில், கொரோனா தனிமை வார்டுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, சென்னையில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை, வரும், 2ம் தேதிக்குள் தயார் செய்யும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ், இரு தினங்களுக்கு முன், சென்னை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார்.அதைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சென்னை கலெக்டர் அனுப்பியுள்ள கடிதம்:அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை, கட்டட ஸ்திரத் தன்மை, வாகன நிறுத்தம் மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 'தயாராக இருங்கள்'

அந்த பள்ளிகளை, பேரிடர் மேலாண்மை முகாம்கள் செயல்பட, தயார் நிலையில் வைத்திருக்கும் படி, தலைமை ஆசிரியர் மற்றும் துணைத் தலைமை ஆசிரியர்களுக்கு, அறிவுரை வழங்க வேண்டும். பள்ளிகளில் முகாம்கள் அமைப்பது தொடர்பாக, உயர் அலுவலர்கள் பார்வையிட வந்தால், இன்று முதல், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது துணை தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளில் தவறாமல் இருக்க வேண்டும்.பார்வையிட வரும் அலுவலர்களுக்கு, தகுந்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.