தனியார் கல்லுாரிகளில் 'ஆன்லைன்' பதிவு துவக்கம்

சென்னை : தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.


கொரோனா பிரச்னையால், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதன் காரணமாக, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்ட்டில் துவங்கும் என, பல்கலை மானிய குழு அறிவித்து உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, சில தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளன.

பிளஸ் 2 மதிப்பெண் வராவிட்டாலும், அதற்கு முன், மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, அவற்றை பரிசீலனை செய்யவும், ரிசல்ட் வந்ததும், ஒதுக்கீட்டை முடிவு செய்யலாம் என்றும், கல்லுாரி நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன. ஆனால், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, இன்னும் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. எனவே, தனியார் கல்லுாரிகளும், அரசின் அனுமதியின்றி, ஆன்லைன் விண்ணப்ப பதிவை மேற்கொள்ளக் கூடாது என, பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.