தமிழகத்தில் மே 4க்கு பிறகு கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் என்னென்ன?

சென்னை: தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், தளர்வுகள் குறித்து முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா
வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடம் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மே 4 முதல் மே 17 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


latest tamil news



பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்..

* அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
* சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அவர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே வர வேண்டும்.
* ஐ.டி நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி.
* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.
* முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர மொபைல் போன் கடை, வீட்டு உபயோக கடை போன்ற தனிக் கடைகள் காலை 11 முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதி.


தமிழகத்தின் பிற பகுதிகளில்..

* ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
* தொழிற்பேட்டைகள், நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஹார்டுவேர் உற்பத்தி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகளுக்கு அனுமதி.
* கட்டுமான பணிகளுக்கு தேவையான விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை.
* மொபைல் போன் கடை, வீட்டு உபயோக கடை போன்ற தனிக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதி.
* கிராமப்புரங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள், வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை மாவட்ட கலெக்டர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.
* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

latest tamil news



எவற்றுக்கெல்லாம் தடை:

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
* திரையரங்குகள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், போன்ற இடங்களுக்கு தடை.
* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை.
* விமானம், ரயில், பேருந்து போக்குவரத்துக்கு தடை.
* டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷாவிற்கு தடை.
* மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை.
* தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளுக்கு தடை.
* இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
-- நோய் தொற்றை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொற்று குறைய குறைய தமிழக அரசு, மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.