19ம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியீடு வெளிமாவட்டத்தில் தங்கியவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதுவது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன்

ஊரடங்கால் வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதுவது எப்படி என்பது பற்றி வரும் 19ம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் .தி.மு.. சார்பில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 1ம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று போக்குவரத்து முடக்கத்தால் அங்கேயே தங்கி இருக்க வாய்ப்பு உள்ளது.
 
இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இது தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் 19ம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வுகளை 1ம் தேதி நடத்துவது என கல்வியாளர்கள் குழு ஆலோசனைபடிதான் முடிவு செய்யப்பட்டது. முதல்வரின் ஒப்புதல் பெற்றுத்தான் தேர்வு அறிவிப்பு
வெளியிடப்பட்டது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கலெக்டர்கள் தேர்வு மையங்களை பார்வையிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களை நேரடியாக தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று, திரும்பவும் கொண்டு வந்து விடுவதற்கான ஏற்பாடுகளை கலெக்டர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது, மாணவர்களுக்கு யூ டியூப், கல்வி சேனல் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்காக ஆன்லைனில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், ஏறக்குறைய 3 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் மாணவர்கள் 10 கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.