அரசு ஊழியர் ஊதியம், 'கட்' கேரளாவில் அவசர சட்டம்

திருவனந்தபுரம் :கொரோனா நிவாரண நிதிக்கு, கேரள அரசு ஊழியர்களின் ஆறு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம், அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.


கேரளாவில், , கொரோனா நிவாரண நிதிக்காக , அடுத்த ஐந்து மாதங்களுக்கு, மாதம், ஆறு நாட்களுக்கான அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என, கேரள அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வழக்கு தொடுத்தன. இதையடுத்து, 'ஊதியம் என்பது அரசு பணியாளரின் உரிமை. மேலும், பிடித்தம் செய்யப்படும் ஊதியம், எப்போது திரும்பத் தரப்படும்; எவ்வகையில் செலவிடப்படும் என்ற விபரத்தை அரசு அறிவிக்கவில்லை.

latest tamil news




'அதனால், அரசு ஊழியர்களின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று கேரள அமைச்சரவை கூடி, அடுத்த ஐந்து மாதங்களுக்கு, அரசு ஊழியர்களின் ஆறு நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கு, அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்தது .அவசர சட்டம் தொடர்பான தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த உடன், நடப்பு ஏப்ரல் மாத ஊதியத்தில், ஆறு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிகிறது.