மோசடி செய்ய திட்டமிடும் கும்பல் - வங்கிகள் எச்சரிக்கை!

லோன் இஎம்ஐயை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைப்பது தொடர்பாக மக்களிடம் நாங்கள் ஓடிபி எதையும் கேட்க மாட்டோம் என்று எச்டிஎப்சி, எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தெரிவித்துள்ளது.


 
கொரோனா காரணமாக மொத்தமாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த லாக் டவுன் நீடிக்கும். இந்த நிலையில் கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் பெரிய அளவில் கடன்படும் நிலைக்கு சென்றுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வங்கிகளில் லோன் எடுத்தவர்கள் அடுத்த மூன்று மாதத்திற்கு இஎம்ஐ செலுத்த வேண்டியது இல்லை என்று கூறியது.
விலக்கு
 
அதாவது பர்சனல் லோன், வீட்டு லோன் உள்ளிட்ட லோன்களுக்கு மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்தது. இந்த சலுகையை இந்தியாவில் உள்ள எல்லா வங்கிகளும் தங்களிடம் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கும் மற்ற தொழில் நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
 
மூன்று மாதம் அவகாசம்
இதையடுத்து வங்கிகள் தங்களிடம் லோன் எடுத்தவர்களுக்கு மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் அளிப்பதாக அறிவித்தது. ஆனால் இப்போதே லோன் இஎம்ஐ செலுத்தலாம் அல்லது 3 மாதம் கழித்து செலுத்தலாம். அது உங்கள் விருப்பம். நீங்கள் இந்த சலுகையை தேர்வு செய்வதும், தேர்வு செய்யாததும் உங்கள் விருப்பம் என்று வங்கிகள் அறிவித்தது.
வங்கிகளுக்கு மெயில் அனுப்ப வேண்டும்
இந்த சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கு உரிய மெயில் ஒன்றை வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த நிலையில் இந்த சலுகையை பயன்படுத்தி சிலர் மோசடி செய்ய களமிறங்கி உள்ளனர். அதன்படி சில ஏமாற்று கும்பல், நாங்கள் குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் லோன் இஎம்ஐயை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க போகிறோம்.
 
லோன் இஎம்ஐ கிடையாது
லோன் இஎம்ஐயை தள்ளி வைக்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வரும், அதை எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். இந்த ஓடிபி எண்ணை பெறுவதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அந்த ஏமாற்று கும்பல்கள் திருடுகிறது. பல காலமாக ஓடிபி மூலம் திருடும் கும்பல் தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க தொடங்கி உள்ளது.
அறிவுரை வழங்கி உள்ளது
 
இதனால் தற்போது எச்டிஎப்சி, எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. லோன் இஎம்ஐயை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க நாங்கள் ஓடிபி எதையும் கேட்க மாட்டோம். அதனால் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யாரும் ஓடிபி கேட்டாலும் கொடுக்க வேண்டாம். ஏமாற்ற பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
இன்னும் சில தனியார் வங்கிகளும் இது தொடர்பாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. அதேபோல் தமிழக போலீசும் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யாரும் ஓடிபி கேட்க மாட்டார்கள். அதனால் யார் போன் செய்து ஓடிபி கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று தமிழக போலீஸ் அறிவுறுத்தி உள்ளது.