10ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல்வர் கையில் முடிவு; செங்கோட்டையன்

கோபி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட, கிருமி நாசினி சுரங்கம் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி: கோபியில், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும், கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கோபி தொகுதியில், 11 ஆயிரத்து, 271 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து, கொரோனா நிலைமை சீரான பின்தான் முடிவு செய்ய முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.