உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள ஒப்புதலுக்கு புது நடைமுறை: உயர்நீதிமன்றம் தடை

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளப் பட்டியலில் தாளாளர் ஒப்புதல் கையெழுத்திடும் அதிகாரத்தை மாற்றிய அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது.
 
அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல் தயாரித்து தாளாளர் கையழுத்திட்டு, மாவட்டக் கல்வி அலுலவகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அனுமதி கிடைத்ததும் தாளாளர் ஒப்புதலுடன், கருவூலத்திற்கு அனுப்பி, பின் சம்பளம் பட்டுவாடா செய்யும் நடைமுறை இருந்தது. இதில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் 2018 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், 'தாளாளர் அரசு ஊழியர் இல்லை. அவரிடம் ஒப்புதல் கையெழுத்துப் பெறத் தேவையில்லை. பள்ளி உதவி எழுத்தர் சம்பளப் பட்டியல் தயாரித்து, தலைமை ஆசிரியர் சரிபார்த்து கையெழுத்திட்டு, மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்,' என குறிப்பிடப்பட்டது. அதை எதிர்த்து கோட்டார் டயோசிஸ் ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்ஸாண்டர் உட்பட பல்வேறு கல்வி நிறுவன நிர்வாகங்கள் தரப்பில், 'அரசின் உத்தரவு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு எதிரானது.
 
சம்பள பில்லில் கையெழுத்திட தாளாளருக்கு அதிகாரம் உள்ளது. அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றம் கிளையில் மனு செய்யப்பட்டது.நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இடைக்காலத் தடைவிதித்தார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.