'பிட் இந்தியா' திட்டத்தில் பள்ளிகளுக்கு 3, 5 ஸ்டார் ரேட்டிங்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

பாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உடல் வலிமையை பேணும் வகையில் 'பிட் இந்தியா' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து 
கொள்ளவும், உடல் நலத்தை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிட் இந்தியா மூவ்மென்ட் சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் பிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
 
நோயற்ற இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வரும் அரசு அதற்கு உதவி புரியும் வகையில் 'பிட் இந்தியா' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, அதற்கான இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து பிட் இந்தியா ஸ்கூல் சர்டிபிகேட் பெறவேண்டும். இதன் தொடர்ச்சியாக, இதே இணையதளத்தில் பிட் இந்தியா சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் பிட் இந்தியா பிளாக் 3 ஸ்டார் ரேட்டிங் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பணியை உடனே முடிக்குமாறு அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.