முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் மேலும் தள்ளிப் போகிறதா?

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.
 
இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
 
பணிநியமனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ஜனவரிக்குள் பணிநியமனம் நடைபெறும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது நீதிமன்ற தீர்ப்பால் வேதியியல் பாடத்திற்கான தேர்வுப்பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய பட்டியல் வெளியிடுவதா மேல்முறையீடு செய்வதா என்ற குழப்பம் அதிகாரிகளிடையே நிலவுகிறது.
மேலும் நிதிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய பணிநியமனத்திற்கு ஒப்புதல் வழங்க நிதித்துறை தயங்குவதாலும் தற்போதைக்கு பணிநியமனம் இல்லை என்று தெரிகிறது.
மே மாதத்திற்குள் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.