முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்!- புது தேர்வுப் பட்டியலைத் தயாரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக, புது தேர்வுப் பட்டியலைத் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 356 முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2019 ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்தத் தேர்வில்
அதிக மதிப்பெண் பெற்றவர்களைப் பொதுப் பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரி சோபனா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை மறுபரிசீலனை செய்து, புதிய தேர்வுப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், அதில் பின்னடைவு காலிப் பணியிடங்களை முதலில் நிரப்ப வேண்டும் என்றும், அதன்பின், தற்போதைய காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.