2 நாள் வேலைநிறுத்தம் வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை :ஊதிய உயர்வு, ஐந்து நாள் வேலை உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31 மற்றும் பிப்ரவரி, 1 ஆகிய தேதிகளில், நாடு தழுவிய அளவில்,
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட உள்ளனர்.வங்கிகளை தனியார் மயமாக்கவோ, இணைக்கவோ கூடாது; வைப்புத் தொகைகளுக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்; வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 8ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்தது.இதில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட, ஐந்து சங்கங்கள் பங்கேற்றன. இதனால், 21 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. தற்போது, இரண்டு நாள்கள் வேலைநிறுத்த போராட்டத்தை, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:ஊதிய உயர்வு, வாரத்தில் ஐந்து நாள் வேலை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், குடும்ப ஓய்வூதியத்தில் மேம்பாடு, வங்கி அதிகாரிகளுக்கான வேலை நேரத்தை வரையறுத்தல் உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.