லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது : சிவன்

நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்தரியான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்க 2.1 கி.மீ., தொலைவில், நிலவில் மோதி நொறுங்கியது. 

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்டது. இஸ்ரோவிற்கு உதவியாக அமெரிக்காவின் நாசாவும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. 

இந்நிலையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடங்கிய புகைப்படத்தை நாசா நேற்று (டிச.,03) வெளியிட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர் நாசாவுக்கு உதவியதாக, நாசா தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டியில், இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபடித்து விட்டது. இது பற்றி இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

வேண்டுமானால் நீங்கள் சென்று பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10 ம் தேதி இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் இஸ்ரோவின் இந்த தகவலை சரி பார்க்காமல், தாங்கள் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக நாசா எவ்வாறு தகவல் வெளியிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.