தேர்தல் பணியா; தேர்வு பணியா? அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தேர்தல் பயிற்சி வகுப்பு நாளில், திறனறி தேர்வை அறிவித்ததால், ஆசிரியர்கள் பலர் அவதிக்கு ஆளாகினர். தேர்வு துறையால் ஏற்பட்ட இந்த குளறுபடி, தற்காலிக ஆசிரியர்களால் சமாளிக்கப்பட்டது.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும், 27 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது. பயிற்சி வகுப்புஉள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று நடந்தது. இதற்கான அறிவிப்பை முன்கூட்டியே, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
 
அதைப் பற்றி கவலைப்படாத, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி, எட்டாம் வகுப்பு மாணவர் - மாணவியருக்கான, மாநில அளவிலான திறனறி தேர்வை அறிவித்தார். அதனால், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு செல்வதா அல்லது தேர்வு பணிக்கு செல்வதா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்வு துறை இயக்குன ரின் குளறுபடி குறித்து, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, தேர்வு பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள், நேற்று காலை அவசரமாக விடுவிக்கப்பட்டு, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்பட்டனர். அலைக்கழிக்கப்புபின், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் சம்பளம் பெறும் தற்காலிக ஆசிரியர்களை அழைத்து, திறனறி தேர்வை நடத்த, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டது.
 
இதன் காரணமாக, நேற்று காலையில், தேர்வு பணிக்கு சென்ற பல ஆசிரி யர்கள், அங்கிருந்து, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு செல்லுமாறு, திருப்பி அனுப்பப்பட்டனர். அங்கு மிங்கும் என அலைக்கழிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் அவதியடைந்தனர்.