8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் திறனறி தேர்வு

சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை மறுநாள், திறனறிதல் தேர்வு நடக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்லுாரிகளில் படிக்கும் வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 7,000 பேர் கல்வி உதவி பெறலாம்.இந்த உதவித் தொகை பெற, திறனறிதல் தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.,1ல் திறனறிதல் தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால், தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த தேர்வு, நாளை மறுநாள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் தலைமையில், தேர்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வுக்கான வினாத்தாள்களும், அரசு தேர்வு துறையில் இருந்து அனுப்பப் பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் மற்றும் பிரச்னைகள் இல்லாமல் கண்காணிக்க, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.