'ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் சங்கங்களிடம் ஆலோசித்த பின் முடிவு'

கோபி, :''ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்த பின், விருப்ப ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.,) குறித்து முடிவெடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பங்களாப்புதுார் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
உயர்நிலைப்பள்ளிகளில், ௧௦ கம்ப்யூட்டர்கள், மேல்நிலைப்பள்ளிகளில், 20 கம்ப்யூட்டர்கள் என இணைத்து, கல்வி போதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கான பணி நிறைவேற்றப்படும். அடுத்தாண்டு பள்ளி துவங்கியதும், மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 68 ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்த பிறகே, ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.,) குறித்து முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து ஆசிரியர்கள் விரும்பினால், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதன்பின் முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.