பொதுத்தேர்வு மாணவர்களின் விபர திருத்தம் செய்ய அவகாசம்

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களில் திருத்தம் செய்வதற்கு, வரும், 11ம் தேதி வரை, சி.பி.எஸ்.இ., அவகாசம் அளித்துள்ளது.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுத உள்ள மாணவர்களின் விபரங்கள், பள்ளி வாரியாக ஆன்லைனில், வாரியத்துக்கு அனுப்பப்பட்டன.

இந்த விபரங்கள் ஆகஸ்டில் சேகரிக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு வாரியத்தால் சரிபார்க்கப்பட்டன. அதில், மாணவர்களின் விபரங்களில் பிழைகள் இருந்ததும், சிலவற்றில் தேவையான விபரங்கள் சேர்க்கப்படாமல் இருந்ததும் கண்டறியப் பட்டது. இதையடுத்து, பொது தேர்வுக்கான விபரங்களில், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கான ஆன்லைன் வசதி, நேற்று செயல்பட துவங்கியது. 'வரும், 11ம் தேதிக்குள் விபரங்களில் திருத்தம் செய்யலாம்; அதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு துறை அறிவித்துள்ளது.