அரசு கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
நடப்பு கல்வியாண்டில் (2019-20) அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்வரை மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார்.அதையேற்று பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி 11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக ரூ.25.26 கோடி நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் 34 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.