சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பிளஸ் 1 தேர்வால் சிக்கல்

சென்னை,: பிளஸ் 1 பொது தேர்வு எழுதாத, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக, பிளஸ் 2 தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏற்கனவே பொது தேர்வு நடந்து வந்தது. ஆனால், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளில், மாணவர்கள் திறம்பட செயல்படும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வு துவங்கப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வில் பங்கேற்று, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்க முடியும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து, தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 சேர்ந்தவர்களுக்கு, பொது தேர்வு எழுதுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதாவது, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1ல், பள்ளி அளவில் மட்டுமே தேர்வு நடத்தப்படும். ஆனால், மாநில பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. எனவே, பிளஸ் 1ல் பொது தேர்வு எழுதாத, சி.பி.எஸ்.இ., மாணவர்களை, பிளஸ் 2 பொது தேர்வில், எப்படி அனுமதி அளிப்பது என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து, அரசு தேர்வு துறை மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையில், சட்ட ரீதியான முடிவு எடுத்து, அரசாணை வெளியிட்டால் மட்டுமே, சி.பி.எஸ்.இ., மாணவர்களை, பொது தேர்வில் பங்கேற்க வைக்க முடியும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.