அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு எலக்ட்ரானிக் முறையில் மாற்றம் கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தகவல்

9.30 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு ரூ. 300 கோடியில் 2020 ஜனவரி முதல் எலக்ட்ரானிக் முறையில் மாற்றப்படும் ,''என, கருவூல கணக்கு துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார்.

தேனியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

அரசின் அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் சமர்ப்பிக்கும் பணிகளை சுலபமாக முடிக்க மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வழக்கமாக சம்பள பில் தயாரித்து வங்கியில் பணம் பெற 15 நாட்கள் ஆகும்.இப்புதிய திட்டத்தில் காலையில் பில் சமர்ப்பித்தால் மாலையில் வங்கி கணக்கில் பணம் ஏறிவிடும். இத் திட்டம் முதற்கட்டமாக சென்னை, அரியலுார், சேலம், கரூர், மதுரை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இம்மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும்.மாநிலம் முழுவதும் 9.30 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டோம். இனி அவர்களின் பணிப்பதிவேடுகள் குறித்து ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ளலாம். ஓய்வு பெறும் நாளிலே, பணப்பலன்களை தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரி முதல் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு, இனி எலக்ட்ரானிக் எஸ்.ஆர்., ஆக செயல்படும். இத் திட்டத்திற்காக ரூ.300 கோடி அரசு செலவிடுகிறது.'விப்ரோ' உள்ளிட்ட மூன்று தனியார் நிறுவனங்கள் 5 ஆண்டுகள் பராமரிக்கும். இதனால் அரசின் வரவு செலவு எளிதாகவும், வெளிப்படை தன்மையாகவும் செயல்படும், என்றார்.