நீங்க தப்பு செய்றத பார்க்க நான் வேலைக்கு வரல.. அத்தனை பேரையும் சஸ்பெண்ட் பண்ணிருவேன்'..! முதல்வன் பட பாணியில் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஆட்சியர்..!

முதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராக வரும் அர்ஜுன் பல அதிரடி நடவடிக்கைகளை கையாள்வார். ஒழுங்காக பணியாற்றாமல் இருக்கும் அரசு அதிகாரிகளை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து உத்தரவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே போன்ற ஒரு சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் சகாயம் போன்று ஒரு சில அதிகாரிகளே நேர்மையாக பணியாற்றி வருகின்றனர்.
அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் ஒருவர். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமி பொறுப்பேற்றது முதல் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். குறிப்பாக பெண் குழந்தைகளின் நலனில், கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார்.ஏழை மக்களுக்கான சேவை செய்யும் பணியாக அரசு அதிகாரத்தை பயன்படுத்துவதாக மக்கள் கூறுகிறார்கள்.
 
இந்த நிலையில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்காக பயனாளிகளை தேர்வு செய்யக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் பலர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதில் கோபமடைந்த ஆட்சியர் திங்கள் கிழமைக்குள் பயனாளர்களை தேர்வு செய்யாவிடில், அனைவரையும் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று வாட்ஸ் அப் ஆடியோவில் எச்சரித்துள்ளார். அது தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த ஆடியோவில் அவர் பேசியது, "அனைவருக்கும் வணக்கம் நான் ஆட்சியர் பேசுகிறேன், ஏற்கெனவே கடந்த மீட்டிங்கில் பசுமை வீடு திட்டம் மற்ற திட்டங்கள் மிகவும் தொய்வாக இருக்கிறது என்று பேசினோம். அரசும் கேள்வி எழுப்புகிறார்கள். நாங்க பதில் சொல்கிறோம். வீடு பற்றி நாம் கடந்தமுறை விரிவாக பேசியபோது இதுகுறித்து அதிக முக்கியத்துவம் குறித்து விவாதித்தோம். நாம் வீடுகட்டும் திட்டம் குறித்து அதிக அக்கறைக்காட்டவேண்டும்.
 
நமது கையில் உள்ள டேட்டாக்கள் தகுதியுள்ள பயனாளிகள் எண்ணிக்கை, வீடு கையில் வைத்துள்ளோம். ஆனால் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிறைய புகார்கள் நமக்கு வந்துக்கொண்டிருக்கிறது. இன்றுகூட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான குறைகள் வந்தது.
திங்கட்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம், ஒன்று நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா? அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கங்க. திங்கட்கிழமை எங்கேயாவது ஒரு பஞ்சாயத்து செயலரோ? அது சம்பந்தப்பட்ட பிடிஓ அல்லது டெபுடி பிடிஓ யாராக இருந்தாலும்சரி. திங்கட்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கப்படாவிட்டால் அன்று எத்தனைப்பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எப்படி செயல்படுத்துகிறீர்களோ செய்யுங்கள். திங்கட்கிழமை இந்த யுத்தத்தை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் உறுதியாக இதைச் சொல்கிறேன். என்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்துவிட்டேன். நீங்கள் தவறு செய்வதை பார்த்துக்கொண்டிருக்க நான் இங்கு பணிக்கு வரவில்லை.தப்புசெய்வதை பார்த்துக்கொண்டு காவல்காப்பவன் நான் அல்ல. தப்பை சரி செய்ய வந்துள்ளேன். இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து பிடிஓவும், பஞ்சாயத்து செயலர்களும் இதை கவனத்துடன் அணுகி முடிக்கவேண்டும்.
திங்கட்கிழமை காலையில் வேலைக்கு வந்துவிட்டு பின்னர் மாலையில் நீங்கள் அனைவரும் வேலையுடன் செல்கிறீர்களா? இல்லை வேலை இல்லாமல் போகிறீர்களா? என்பதை முடிவு செய்துக்கொள்ளுங்கள். இந்த சவாலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்".