நவ.18ல் கோட்டை நோக்கி பேரணி: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் தகவல்

மதுரை, :''இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56 ஐ ரத்து
செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டை நோக்கி நவ.18ல் பேரணி நடத்தப்படும்,'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது தான்தோன்றித்தனமானது. தெலுங்கானா மாநிலம் உருவாக போராடியவர்களில் போக்குவரத்துத்தொழிலாளர்களும் அடங்குவர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து பணி நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. அதை கண்டித்து இன்று (அக்., 23) தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.வீடுகள் திட்டம் தொடர்பாக ஊரக வளர்ச்சி அலுவலர்கள் குறித்து திருவண்ணாமலை கலெக்டர் பேசியதை திரும்ப பெற வேண்டும். அங்கு ஊரக வளர்ச்சி ஊழியர்கள் மனஉளைச்சலில் பணிபுரிகின்றனர்.அரசாணை எண் 56 ரத்து, நான்கரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.11 முதல் 15 வரை ஐந்து முனைகளில் இருந்து பிரசார பயணம் நடக்கும். நவ.18ல் பேரணி நடத்தி முதல்வர் பழனிசாமியிடம் மனு அளிக்கப்படும், என்றார்.மாவட்ட நிர்வாகிகள் நீதிராஜா, தமிழ், அய்யங்காளை உடனிருந்தனர்.