பாட புத்தகம் ஒரே தவணயைில் வேண்டும்:தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை:'பாட புத்தகங்களை, ஒரே தவணையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தவணை
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு சார்பில் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப் படுகின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணம் பெற்று, தமிழ்நாடு பாட நுால் கழகம் வாயிலாக, புத்தகம் வினியோகிக்கப் படுகிறது.
ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரித்து, மூன்று தவணைகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இரண்டு தவணைகளாகவும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த புத்தகங்களை, முன்கூட்டியே வழங்காமல், தாமதமாக வழங்குவதால், பள்ளிகளில் பாடம் நடத்துவதும், திருப்புதல் செய்வதும் பாதிக்கப்படுகிறது.

பொது தேர்வு நடத்தப்படும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும், பாட புத்தகங்கள் வழங்க தாமதமாவதால், வகுப்புகள் நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும், பாடங்களை மீண்டும் ஒரு முறை, பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒரே பருவம்
இது குறித்து, தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில செயலர் பிரமநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளி கல்வி இயக்குனர்களை சந்தித்து, மனு அளித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு பருவத்துக்கும், பாடநுால் கழக கிடங்குகளில், தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி, நெருக்கடியை ஏற்படுத்துவதால், அனைத்து புத்தகங்களையும் ஒரே பருவத்தில் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கையும் எழுந்துள்ளது.