தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்கள் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை, பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது.மாநிலம் முழுவதும் அரசு பள்ளி கட்டடங்களை, மாநில அரசின்நிதி வாயிலாக மட்டுமின்றி, நபார்டு வங்கி கடனுதவியுடன் பொதுப்பணித் துறையினர் கட்டியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும், அரசு கட்டடங்களை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியில், பள்ளி கட்டடங்களிலும் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது, மாநிலம் முழுவதும் கட்டப்பட்ட, பல்வேறு பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.வெள்ள அபாய காலங்களில், பொதுமக்களும், இந்த கட்டடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடங்கள் குறித்து, 10 நாட்களில் கணக்கெடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.சேதமடைந்த பள்ளிகளில், மழைக்கு முன், தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.