'சந்திரயான் - 2' சிக்னல் துண்டிப்பு

பெங்களூரு: 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வெளியிட்டார்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும்பெங்களூரு வந்தனர்.





முன்னதாக, பிரதமர் மோடி கூறுகையில், ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை காண, நாட்டு மக்களுடன், நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்குவது மிகவும் சவாலான பணி என்பதால்,பிரதமர், விஞ்ஞானிகள் முதல், சாதாரண மக்கள் வரை, நேற்று இரவு, 'திக்... திக்...' மனநிலையிலேயே காத்திருந்தனர்.




இன்று, அதிகாலை, 2:15 மணி அளவில், 'லேண்டர்' தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார். இதையடுத்து, 'விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்' என கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.