அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் தேசிய விருது பெற்ற தலைமையாசியர் நெகிழ்ச்சி

கரூர், ''நம் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க வைத்து, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்,'' என, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்
செல்வக்கண்ணன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, மோளப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்கண்ணன், 53. க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியராக, 2005 முதல் பணியாற்றி வருகிறார்.
தன் இரண்டு பெண் குழந்தைகளையும், இதே பள்ளியில் படிக்க வைத்தார். மூத்த மகள் பிரியதர்ஷினி, 25, தற்போது, முதுநிலை டாக்டர் படிப்பும், இளைய மகள் காவியதர்ஷினி, 19, பொறியியலும் படித்து வருகின்றனர்.
இவர் பணியாற்றும் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு யோகா, கராத்தே, கீ போர்டு வாசித்தல், நடனம் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இவர்தான், முதன் முதலில் கல்விச் சீர் விழாவை நடத்தினார்.
அரசு பள்ளியில், குழந்தைகளை சேர்க்க வேண்டி, குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இப்பள்ளி, மாவட்டத்தில், சிறந்த கிராம கல்விக் குழுவிற்கான விருது, மாவட்டத்தில் சிறந்த புதுமை பள்ளிக்கான விருது, மாவட்ட அளவில், துாய்மை பள்ளிக்கான விருது ஆகியவற்றை பெற்றுள்ளது.கடந்த, 2016ல், தமிழக அரசின், 'ராதாகிருஷ்ணன் விருது' பெற்றுள்ளார். நடப்பாண்டில், மத்திய அரசின், 'தேசிய நல்லாசிரியர் விருது' இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, செல்வக்கண்ணன் கூறியதாவது:
பள்ளியின் சூழலை மாற்றினால், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்ற நோக்கில், பல மாற்றங்களை கொண்டு வந்தேன். தற்போது, இப்பள்ளியில், 250 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
அடுத்தவர்களிடம் கோரிக்கை வைக்கும் முன், நாம் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால், என் மகள்களை, அரசு பள்ளியில் படிக்க வைத்தேன். ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்து, முன்னுதாரணமாக இருந்தால், மக்களுக்கும் நம்பிக்கை வரும்.இவ்வாறு அவர் கூறினார்.இவரை பாராட்ட, 98946 66765 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* கோபி ஆசிரியர் தேர்வு
ஈரோடு மாவட்டம், கோபி கல்வி மாவட்டம், வைரவிழா மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மன்சூர் அலி, 52. இவர், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
கடந்த, 1991 முதல் ஆசிரியர் பணியில் இருக்கிறேன். மாணவர்களுக்கு புதிய யுக்தியில், சமூக அறிவியல் பாடம் நடத்தியதற்காக, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். '3டி' வரைபடம் மற்றும் சுவர் ஓவியம் மூலம் யுக்திகளை கையாண்டு, பாடம் நடத்துகிறேன்.
இதுவரை, ஏழு விருதுகள் வாங்கியுள்ளேன். புதிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை போதிப்பதே என் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.