ஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாள் முடிவுகள் வெளியீடு

சென்னை, ஆசிரியர் தகுதி தேர்வின், முதல் தாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'பல பட்டதாரிகளுக்கு, தேர்வு எழுதவே தெரியவில்லை' என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.அரசு
பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, ஜூன், 8 மற்றும், 9ம் தேதிகளில் நடந்தது.
இரண்டு தாள்களுக்கும் சேர்த்து, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதில், முதல் தாளுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. மொத்தம், ஒரு லட்சத்து, 62 ஆயிரத்து, 314 பேர் எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், பெரும்பாலானவர்கள், 60 மதிப்பெண்களுக்கு குறைவாகவே பெற்றுள்ளனர். சிலர், 85 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். அனைவருக்கும், மதிப்பெண் சான்றிதழ், இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.இந்த தேர்வு எழுதிய பட்டதாரிகள் பலருக்கு, சாதாரண போட்டி தேர்வு முறையில், 'ஷேடிங்' எனப்படும், சரியான விடையை, வட்டமிடும் முறை கூட தெரியவில்லை.விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும் தெரியவில்லை என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கணினி வழியில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்தபோது, பல தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பலர், எந்த இடத்தில், சரியான தகவலுக்கான, ஷேடிங் செய்ய வேண்டுமோ, அதை செய்யவில்லை. அதனால், மதிப்பீடு செய்யவே முடியவில்லை.சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளுக்கு வட்டமிட்டுள்ளனர். அதேபோல், விண்ணப்பத்திலேயே, தேர்வு எழுதுவதற்கான விருப்ப மொழியை குறிப்பிடுவதில், குளறுபடி செய்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.