ஐ.சி.எஸ்.இ., பாட திட்டம் விரைவில் மாற்றம்

சென்னை:இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ.,யின் பாட திட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது.


இந்தியாவில், அனைத்து மாநிலங்களின் பாட திட்டங்களும், தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.சி.பி.எஸ்.இ., பாட திட்டமும், தேசிய கல்வி கொள்கையின் கீழ், தேசிய கல்வியியல் கவுன்சிலால் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் என்ற, ஐ.சி.எஸ்.இ., பாட திட்டம், தேசிய கல்வி கொள்கையின் கீழ் வராமல், தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தேர்வுகளும், மாணவர்கள் சேர்க்கையும், தனியாக நடத்தப்படுகின்றன.இந்த பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர், மற்ற மாணவர்களுடன் போட்டி போட முடியாமல், உயர் கல்வியில் திணறும் நிலை உள்ளது.
மேலும், அதிக சுமையுள்ள பாட திட்டம் என்பதால், பொது தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறும், பிளஸ் 2 மாணவர்கள், உயர் கல்விக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகார்களை, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்துள்ளது.இதையடுத்து, அதிக சுமையுள்ள பாட திட்டத்தை, விரைவாக மாற்ற வேண்டும். மாநிலங்களில் பின்பற்றப்படும் பாட திட்டத்தை போல, தேசிய கல்வி கொள்கையின் கீழ் மட்டுமே, பாட திட்டம் தயாரிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, பாட திட்டத்தை மாற்ற, ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் முடிவு செய்துள்ளது.