ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு

ஒரே நேரத்தில், ஒரே பல்கலை அல்லது வெவ்வேறு பல்கலைகளில், இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிப்பது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு அமைத்து உள்ள சிறப்பு குழு ஆய்வு செய்கிறது.ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் படிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, யு.ஜி.சி., சார்பில், 2012ல், ஒரு குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் பல்கலை துணை வேந்தராக இருந்த, பர்ஹான் குமர் தலைமையிலான அந்த குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. 'ஒரு பல்கலையில், முழுநேரமாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலையில், தொலைநிலை மூலம், மற்றொரு பட்டப் படிப்பைபடிக்க அனுமதிக்கலாம்' என, அந்த குழு ஆலோசனை வழங்கியது.இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டம் செயல்பட்டு வரவில்லை.இந்நிலையில், ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்புகள் படிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி., துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான இந்தக் குழு, கடந்தமாதம் அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டமும் நடந்துள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., அதிகாரிகள் கூறியதாவது:தற்போது தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தொலைநிலை, அல்லது பகுதி நேரமாக, ஒரு பல்கலையில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது மற்றொரு பல்கலையில், மற்றொரு பட்டப் படிப்பை படிப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து, இந்தக் குழு ஆய்வு செய்கிறது.வழக்கமான பட்டப் படிப்புடன், சிறப்பு அல்லது தனி திறன் பட்டப் படிப்பையும் படிக்க, மாணவர்கள் விரும்புகின்றனர். அதனால், இது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.