பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், 4,040 மேல்நிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்துள்ளது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேட்டில் தங்கது வருகையை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் காலதாமதமாக வருவது குறைந்துள்ளது. மேலும் ஆதாரில் உள்ள முழுவிவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள், இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும் தனி சாப்ட்வேரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே தலைநகர் சென்னையில் இருந்தபடியே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் வருகை பதிவேட்டு விவரங்களை கண்காணிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிற பணியாளர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கென உருவாக்கப்பட்டுள்ள டிஎன் ஸ்கூல்ஸ் என்ற ஆப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், 2019 - 2020-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் வருகை பதிவு டிஎன் ஸ்கூல்ஸ் என்ற ஆப்பில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
tn schools ஆப் மூலம் தினமும் காலை 10.30 மணிக்குள் வருகை பதிவினை, பதிவு செய்ய வேண்டும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். தற்போது உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற எல்லா பள்ளிகளுக்கும் இம்முறை விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதுவரை இந்த tn schools ஆப் வாயிலாக வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆப் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைபதிவு கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கல்வியாண்டில்அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்
அனைவரும் ஒரே நேரத்தில் பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது இதனையடுத்து வருகைப்பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு பதிலாக 9.35 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். அதே போல மாலை 4.30 மணிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.