இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங், 3ம் தேதி துவக்கம்: நான்கு கட்டங்களாக நடக்குமென அறிவிப்பு

சென்னை:இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங், நாளை மறுநாள் துவங்க உள்ளது. நான்கு கட்டங்களாக கவுன்சிலிங் நடக்கும் என, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், அட்டவணை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், முதலாம்ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் கவுன்சிலிங் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.1.71 லட்சம் இடங்கள்இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 25ல் துவங்கியது.முதற்கட்டமாக, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கும், இரண்டாவதாக, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், நேரடி கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில், 1,766 இடங்கள் ஒதுக்கப்பட்டன.இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலான கவுன்சிலிங், நாளை மறுநாள் துவங்குகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒரு லட்சத்து, 1,692 பேர் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தம், 1.71 லட்சம் இடங்கள் உள்ளன.இதற்கான வழிகாட்டு முறைகள் மற்றும் 'ஆன்லைன் சாய்ஸ் பில்லிங்' என்ற, இணையதள விருப்ப பாட பதிவுக்கான தேதி குறித்த அட்டவணையை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், நான்கு சுற்றுகளாக ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஆறு நாட்கள்ஒவ்வொரு சுற்றிலும், கவுன்சிலிங் கட்டணம் செலுத்த ஐந்து நாட்களும்; விருப்ப பதிவுக்கு மூன்று நாட்களும்; ஒதுக்கிய இடத்தை உறுதி செய்ய இரண்டு நாட்களும் அவகாசம் வழங்கப்படுகிறது. கட்டண அவகாசம் தவிர்த்து, ஒவ்வொரு சுற்று கவுன்சிலிங்கும், ஆறு நாட்கள் நடத்தப்படுகிறது.ஆன்லைனில் பதிவு செய்த பட்டியலில், தரவரிசையின் படி ஒதுக்கப்படும் உத்தேச இடங்களை, மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறினால், அவர்களுக்குஇடங்கள் ஒதுக்கப்படாது; மாறாக, அவர்கள் அடுத்த சுற்றுக்கு மாற்றி விடப்படுவர்.கவுன்சிலிங்கில், 200 முதல், 178 மதிப்பெண் வரை, கட் - ஆப் பெற்ற, 9,872 பேர்; 177.75 முதல், 150 வரை பெற்ற, 21 ஆயிரத்து, 54 பேர்; 149.75 முதல், 115 வரை பெற்ற, 33 ஆயிரத்து, 167 பேர்; 114.75 முதல், 77.5 வரை, கட் - ஆப் மதிப்பெண் பெற்ற, 37 ஆயிரத்து, 599 பேர் பங்கேற்க உள்ளனர்.கவுன்சிலிங்கிற்கு செலுத்தும் கட்டணம், கல்லுாரியில் சேரும்போது, மாணவர்களின் கல்வி கட்டணத்தில் இருந்து, கழித்து கொள்ளப்படும். ஒதுக்கிய இடங்களில் சேராவிட்டால், அவர்களது கட்டணத்தில், 80 சதவீதம் மட்டுமே திருப்பி தரப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.