கும்பகோணம் பள்ளி தீ விபத்தின், 15ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தஞ்சாவூர் : கும்பகோணம் பள்ளி தீ விபத்தின், 15ம் ஆண்டு நினைவு நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது.


இதில், குழந்தைகளை இழந்த பெற்றோர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.தஞ்சாவூர், கும்பகோணம் காசிராமன் செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில், 2004ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் இறந்தனர்; 18 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த, 15ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை, குழந்தைகளை இழந்த பெற்றோர், அவரவர் வீட்டில் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து வழிபட்டனர்.
பின், தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் பெற்றோர் கூடி, 94 குழந்தைகளின் உருவப் படங்கள் அடங்கிய, 'டிஜிட்டல் போர்டு'க்கு மாலை அணிவித்தனர்; மலர்கள் துாவியும், தின்பண்டங்களை வைத்தும், குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர். தீ விபத்தில் படுகாயமடைந்த குழந்தைகள், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். பின், பள்ளியிலிருந்து பெற்றோர் சார்பில் ஊர்வலமாக புறப்பட்டு, பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாலை, பள்ளியிலிருந்து பெற்றோர் அகல் தீபம் ஏற்றி, ஊர்வலமாக சென்று மகா மக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றினர்.இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:தீ விபத்தில் இறந்த குழந்தைகள் தியாக குழந்தைகள். எனவே, அந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையும் விதமாக, ஜூலை, 16ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும், அன்றைய தினம், அனைத்து பள்ளிகளிலும், கும்பகோணத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தவும், அரசு உத்தரவிட வேண்டும்.

கும்பகோணத்தில் அன்றைய தினம் ஒரு நாள் மட்டும், உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில், 15 ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். அடுத்த ஆண்டாவது, எங்களது கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.