12 தேர்வுகளின் முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2018ல், 31 போட்டி தேர்வுகள் நடத்தி, மிகக் குறுகிய நாட்களில் முடிவுகளை வெளியிட்டு, சாதனை படைக்கப்பட்டது. நடப்பாண்டில், தற்போது வரை, 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, 24 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.அவற்றில், 23 நேர்முக தேர்வுடன் கூடிய பதவிகளில், 14 பதவிகளுக்கு நேர்முக தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தேர்வுகளுக்கு, விரைவில், நேர்முக தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்நிலையில், மே மாதம் வரை நடத்தப்பட்டுள்ள, 12 போட்டி தேர்வுகளுக்கு, ஒரே நாளில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவை தேர்வாணையத்தின், http://www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.தேர்வை நடத்திய குறுகிய கால இடைவெளியிலில், ஒரே நாளில், 12 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. தேர்வாணையம் அதிக தேர்வுகளை அறிவித்து, அவற்றை திறம்பட நடத்தி, மிகுந்த வெளிப்படை தன்மையுடன் முடிவுகளை விரைந்து வெளியிட்டுள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.