TET விடைத்தாள் அனுப்பியதில் குளறுபடி

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைத்தாள் மாற்றி அனுப்பப்பட்டதால், சேலம் மாவட்டத்தில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், வரும், 8ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதல் தாள், 9ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இரண்டாம் தாள் என, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.சேலம் மாவட்டத்தில், 8,227 இடைநிலை ஆசிரியர்களுக்கு, 19 மையங்கள், 22 ஆயிரத்து, 168 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 53 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, நேற்று முன்தினம், சேலத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், மையம் வாரியாக, தேர்வர்களின் பதிவெண், பெயர் பட்டியல், அனுமதி சீட்டு, விடைத்தாள் ஆகியவை அடங்கிய கவர், சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டன.அவற்றை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வு மையம், பதிவெண் ஆகியவை சரியாக இருந்த நிலையில், வேறு மாவட்ட தேர்வர்களின் விடைத்தாள்கள் இருந்தன.
முதல் தாள் தேர்வு நடக்கும், 19 மையங்கள், இரண்டாம் தாள் தேர்வு நடக்கும், 53 மையங்கள் அனைத்திலும், இந்த குளறுபடி இருந்ததால், மீண்டும் கவர் திரும்ப பெறப்பட்டு, ஆசிரியர்களை திருப்பி அனுப்பினர்.ஆசிரியர்கள் கூறியதாவது:தேர்வு துறையில் இருந்து, மையம் வாரியாக, விடைத்தாள், பெயர் பட்டியல் ஆகியவை அனுப்பப்பட்டிருந்தன. விடைத்தாளில், தேர்வரின் புகைப்படம், பதிவெண் அச்சிடப்பட்டுள்ள நிலையில், பெயர் பட்டியலில் உள்ள தேர்வர்களின் விடைத்தாள்கள், இங்கு அனுப்பப்படவில்லை.இதனால், அதை திரும்ப பெற்றுக் கொண்டனர். தேர்வுக்கு, இரு நாட்களே உள்ள நிலையில், குளறுபடியை சரி செய்வதற்கான பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.