இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய இடத்தில் சேர உத்தரவு

சென்னை: ஓராண்டுக்கு முன், பொது இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், இந்த முறை இடமாறுதலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


பள்ளி கல்வி துறையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இடமாறுதல் பெற்று, ஒரு கல்வி ஆண்டு நிறைவடையாதவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டில், இடமாறுதல் வழங்கப்படுவதில்லை. இந்த கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், விரைவில் நடக்க உள்ளது. அந்த கவுன்சிலிங்கில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இடமாறுதல் பெற்றவர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆனால், 2018 - 19ம் கல்வி ஆண்டில் இடமாறுதல் பெற்ற பலர், தங்களுக்கு விருப்பமான இடம் கிடைக்காததால், கிடைத்த இடத்தில் சேராமல், ஏற்கனவே பணியாற்றும் இடத்திலேயே உள்ளனர்.இடமாறுதல் பெற்றும்,பணியில் சேராததை காரணம் காட்டி, இந்த ஆண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, ஆசிரியர்கள் பலர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், '2018 - 19ம் கல்வி ஆண்டில், இடமாறுதல் பெற்று, புதிய இடங்களில் சேராதவர்களை, அவர்களின் பழைய இடங்களில் இருந்து, உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில், உடனடியாக பணியில் சேர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.