வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., 'நீட்' தேர்வு கட்டாயம்

சென்னை : வெளிநாடுகளில் மருத்துவ படிப்பில் சேரவும், 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்த ஆண்டு முதல், இது, நடைமுறைக்கு வருகிறது.


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகள் மற்றும், இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கல்வி ஆண்டுக்கான, நீட் தேர்வு, மே, 5ல் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகியுள்ளன. விரைவில், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல், வெளிநாட்டுக்கு சென்று, மருத்துவம் படிக்கும், இந்திய மாணவர்களுக்கும், நீட் தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகியுள்ளது. இதற்கான உத்தரவை, இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாக குழு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, மத்திய அரசின், வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கான சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல், நீட் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, மத்திய சுகாதார துறையில் தகுதி சான்றிதழ் பெற்று, வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவம் படிக்கலாம்.

மருத்துவ படிப்பை முடித்து, இந்தியாவுக்கு வரும்போது, இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும், சோதனை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.