ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம்' - புதிய கல்வி கொள்கை

ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என புதிய கல்வி கொள்கை கூறுகிறது. இதன்படி கிராமப்புற பள்ளிகளில் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அருகிலேயே முறையான தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும், இதற்காக ஊக்கத்தொகை வழங்குவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் இருந்து அவர்களை இடமாற்றம் செய்வது கூடாது என்கிறது புதிய கல்வி கொள்கை. அடிக்கடி இடமாற்றத்தால் மாணவர் ஆசிரியர் இடையிலான நீண்ட கால உறவு கெடுவதோடு கற்றல் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் பணியிடமாற்றங்களை நிறுத்த வேண்டும் எனக் கூறுகிறது.
 
குடும்பச் சூழல், பணிமூப்பு உள்ளிட்ட அரிதான காரணங்களுக்காக மட்டுமே பணியிட மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு முறையை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும், தேர்வு தவிர ஆசிரியர்கள் வகுப்பறையில் டெமோ செய்து காட்டுவது, நேர்காணலில் பங்கேற்பது போன்றவற்றையும் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 4 ஆண்டுகால இன்டகிரேடட் பிஎட் படிப்பே ஆசிரியர் பணிக்காக அடிப்படை தகுதி வாய்ந்த படிப்பாக மாறும் என்றும் அந்த கொள்கை கூறுகிறது. அதேவேளையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, தேர்தல் பணி உள்ளிட்ட கற்றலுடன் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமில்லாத, தன்னிச்சையான ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் விரைவில் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது