மருத்துவ கவுன்சிலிங் சான்றிதழ்களில் குழப்பம்: தெளிவுபடுத்த பெற்றோர் வலியுறுத்தல்

சென்னை:'மருத்துவ கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும்அவர்களின் பெற்றோர், சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெளிவுபடுத்த வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது

.பிளஸ் 2 முடித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, தமிழக அரசின், மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பல வகை சான்றிதழ்களையும் பதிவு செய்ய, மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதில், மாணவர்களுக்கான, 'நேட்டிவிட்டி' எனப்படும், பூர்வீகத்துக்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில் படித்ததற்கான ஆதார சான்றிதழ்கள், ரேஷன் அட்டை, பெற்றோரின் படிப்பு சான்றிதழ்கள் என, பல சான்றிதழ்கள் கேட்கப்பட்டுள்ளன.
அதேபோல, பெற்றோரின் ஜாதி சான்றிதழ், பூர்வீக சான்றிதழும் கேட்கப்பட்டுள்ளது. இதில், மாணவர் மற்றும் பெற்றோரின் எந்தெந்த சான்றிதழ்களை வழங்க வேண்டும்.அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து வகை சான்றிதழ்களும் சமர்ப்பிக்க வேண்டுமா என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.அதேபோல், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பல பள்ளிகளில் படித்திருந்தால், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, தனியாக உறுதி சான்றிதழான, 'போனபைட்' சான்றிதழ் வாங்க வேண்டுமா என, பெற்றோரும், மாணவர்களும் குழப்பம் அடைந்து உள்ளனர்.
மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்ட கையேட்டில், இதுகுறித்து தெளிவான தகவல்கள் இல்லை என, பெற்றோர் கூறுகின்றனர்.எனவே, இதுகுறித்து தெளிவான விளக்கங்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வழிகாட்டு விதிகளாக வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.