அரசு பள்ளிகளில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் சுமார் 6,362 அரசு உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில், 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், வேதியியல், உயிரியல் பிரிவு பாடங்களை எடுத்துபடிக்கும் மாணவர்களின் ஆய்வக சோதனைக்கான உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் வாங்குவதற்காக தலா ரூ.45,000 வருடந்தோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மேலும் அந்த ஆய்வக படிப்புக்கான புத்தகங்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு உள்ள ஆசிரியர்கள், இந்த தொகையை முறையாக பயன்படுவது இல்லை என்றும், ஆய்வகங்களுக்கு முறையான வேதிப்பொருட்களையும் வாங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தரம் குறைந்த ஆய்வகப்பொருட்கள் வாங்கப்பட்டு முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
மேலும் இது சம்பந்தமாக எந்த ஒரு ஒப்பந்த புள்ளி அறிவிப்புகளையும் வெளியிடவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனை கண்டுபிடிக்கவேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் ஆய்வகங்களுக்கு பொருள் வாங்குவதற்கான வெளிப்படையான ஒப்பந்தத்தை ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு பள்ளிகளும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை, வருகிற 17ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.