நாளை மறுநாள் 'நீட்' தேர்வு, 'ரிசல்ட்'

சென்னை: நாடு முழுவதும், 14 லட்சம் பேர் எழுதிய, 'நீட்' தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகின்றன.


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, மே, 5ல், நீட் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது.இந்த தேர்வில், 14 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களின் கணினி வழி விடைத்தாளுக்கான மதிப்பீடு முடிந்துள்ளது. விடை குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள் நகல்கள், மே, 23ல் வெளியிடப்பட்டன. இது தொடர்பான ஆட்சேபனைகள் தெரிவிக்க, நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த கருத்துகளின் அடிப்படையில், விடை திருத்த பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை, நாளை மறுநாள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது. மறுநாள் முதல், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.இம்மாதம் இறுதி வாரத்தில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்க உள்ளது.