'ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு இல்லை!'

சென்னை : ''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு கிடையாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
கூறினார்.'மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும்' என, லோக்சபா தேர்தலுக்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், '2018 - 19ம் கல்வி ஆண்டில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்த வேண்டும்.'அதற்கு, மாநில அளவில், ஒரே வினாத்தாளை தயாரிக்க வேண்டும். இந்த தேர்வில், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, இரண்டு மாதங்களுக்குள், தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என, கூறப்பட்டது.இதை தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, 2019 பிப்ரவரியில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தியும் வெளியானது. அதைத் தொடர்ந்து, '2018 - 19ம் கல்வி ஆண்டில், பொது தேர்வு நடத்தப்படாது' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.தற்போது, புதிய கல்வி ஆண்டான, 2019 - 2020 துவங்கியுள்ளதால், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி, மீண்டும் எழுந்துள்ளது.

நம் நாளிதழுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:இந்த புதிய கல்வி ஆண்டிலும், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. பொது தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும்.எப்படியானாலும், தமிழகத்தை பொறுத்தவரை, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்துவது சாத்தியமில்லாதது.இவ்வாறு, அவர் கூறினார்.