இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங் மாணவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று துவங்கியது. முதல் நாளில், 20 ஆயிரம் பேர் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான, கவுன்சிலிங், ஜூலையில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க, 1.33 லட்சம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று துவங்கியது. இதற்காக, மாநிலம் முழுவதும், 45 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில், பிர்லா கோளரங்கம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் மற்றும் மத்திய பாலிடெக்னிக் ஆகிய இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில், 20 ஆயிரம் மாணவர்களின், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. வரும், 12ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.