நாளை, 'நீட்' தேர்வு, 'ரிசல்ட்' அரசு பள்ளிகள் சாதிக்குமா?

சென்னை : 'நீட்' தேர்வு முடிவு நாளை வெளியாகும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சாதிப்பார்களா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 5ல், நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வுக்கு, 15 லட்சம் பேர் பதிவு செய்து, 14 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவு, நாளை வெளியிடப்படுகிறது. நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின், www.ntaneet.nic.in என்ற, இணையதளத்திலும், இந்திய மருத்துவ கவுன்சிலின், www.mcc.nic.in என்ற, இணையதளத்திலும் முடிவுகளை பார்க்கலாம்.

'பெர்சன்டைல்' என்ற சதமானத்தின் அடிப்படையில், தகுதி பெறும் மாணவர்களின் எண்களும், மதிப்பெண்களும் அறிவிக்கப்படும் என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவில், தமிழகத்தில் உள்ள, 85 சதவீத மாநில அரசின் இடங்களுக்கு, தமிழகத்தை சேர்ந்த பள்ளிக்கல்வி மற்றும் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தகுதி பெறுவர்.

இதில், பெரும்பாலும், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவது வழக்கம். இந்த முறையாவது, அரசு பள்ளிகளில், மாவட்டத்துக்கு குறைந்த பட்சம், மூன்று பேர் வீதம், 100 பேராவது தேர்ச்சி பெறுவார்களா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.